×

வார இறுதியை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படும்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: பிப்.17ம் தேதி(சனிக்கிழமை), பிப்.18ம் தேதி (ஞாயிறு) மற்றும் திங்கட்கிழமை முகூர்த்தம் ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் இன்று கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 750 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று மாலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: 16ம் தேதி (இன்று) காலை முதல் கூடுதலாக 120 அரசு பேருந்துகளை இயக்க உள்ளோம். முதல்வரின் உத்தரவுப்படி மாதவரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்துதான் மற்ற பகுதிக்கு செல்லும். எனவே பயணிகள் வதந்திகளை நம்ப வேண்டாம். தொடர்ந்து வதந்திகளை பரப்பிய தனியார் யூடியூப் சேனல் போன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post வார இறுதியை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படும்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Transport Department ,CHENNAI ,Government Rapid Transport Corporation ,Managing Director ,Mukurtam ,Dinakaran ,
× RELATED அரசு விரைவு போக்குவரத்து கழக...